தென்மேற்கு வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: தென்மேற்கு வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெற்றது. 12 மணி நேரத்தில் உருவாகும் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா என்ற பெயர் சூட்டப்படும்
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நவ.29, 30 ஆகிய தேதிகளில் 21 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.