செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை
பவ்நகர்: குஜராத்தின் பவ்நகர் பகுதியில் சிஹோரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நேற்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண்ணை பார்க்க உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடி சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த டாக்டர் ஜெய்தீப் சின்ஹ கோகில், செருப்புகளை வெளியே கழற்றி விட்டு, உள்ளே வரவும் என கூறியுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் பெண்ணின் உறவினர்கள், டாக்டரை கீழே தள்ளி அடித்தனர்.
காலால் எட்டி உதைக்கவும் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த படுக்கையில் இருந்த பெண் மற்றும் செவிலியர் தடுக்க சென்றனர். இந்த சண்டையில் அங்கிருந்த மருந்து பொருட்கள் மற்றும் பிற சாதனங்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில், ஹிரேன் தங்கர், பவ்தீப் தங்கர் மற்றும் கவுசிக் குவடியா ஆகிய 3 பேரை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். அந்த அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.