வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான தமிழ் பண்பாட்டுப் பயணத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான தமிழ் பண்பாட்டுப் பயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு, இன்று (1.8.2025) முதல் 15.8.2025 வரையிலான தமிழக பண்பாட்டுப் பயணத்திற்கான பயண குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் போன்ற பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் “மரபின் வேர்களோடு” உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான "வேர்களைத் தேடி" என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை முதலமைச்சர் 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர். அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் இன்று முதல் (1.8.2025) 15.08.2025 வரையிலான பதினைந்து நாட்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இப்பயணத்தினை முதலமைச்சர் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள் அவர்களது நாட்டில் தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர். இந்நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்புச் செயலாளர் சஜ்ஜன் சிங் ரா சவான், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.