அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
சென்னை: 2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.06.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் இன்றுடன் (31.07.2025) முடிவடைவதால், மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணாக்கர்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, இவ்வாண்டு முதுநிலை மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவினை 01.08.2025 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 01.08.2025 முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணாக்கர்கள் தாங்கள் சேர விரும்பும் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், 31.07.2025 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்களுக்கான சேர்க்கை நடைபெறும். சேர்க்கைகான விவரம் புலனம் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் ஒவ்வொரு மாணாக்கர்களுக்கும் அனுப்பப்படும். முதுநிலை மாணாக்கர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 20.08.2025 அன்று முதல் தொடங்கும். என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.