சென்னையில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,552 செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி: மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை: செல்லப் பிராணிகளுக்காக நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்காளில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, உரிமம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காகவும் மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) மேயரால் 3.10.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பதிவு செய்யும் உரிமையாளர்களுக்குசெல்லப் பிராணிகளுக்கான உரிமை பதிவு செய்தல், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி நாய்களுக்கு செலுத்துதல் மற்றும் மைக்ரோப் சிப் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்பணியை விரிவுபடுத்தும் வகையில், செல்லப்பிராணி வளர்ப்பவர்களின் வசதிக்காகவும், செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு உரிமம் பெறுவதற்கும், வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதற்காகவும் 9.11.2025, 16.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்திட சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, 9.11.2025 அன்று செல்லப் பிராணிகளுக்கான 7 சிகிச்சை மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டதில், 767 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும், என மொத்தம் 7 மையங்களில் இச்சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் உள்ள செல்லப்பிராணிகள் சிகிச்சை மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், வளர்ப்பு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்களால், வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசிசெலுத்துதல், மைக்ரோ சிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்குதல் பணி நடைபெற்றதை மேயர் பிரியா பார்வையிட்டுஆய்வு செய்தார்.
பின்னர் செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்களிடம் இம்முகாம் தொடர்பாக கலந்துரையாடி, உள்ளாட்சி அமைப்பு சட்ட விதிமுறைக்குட்பட்டு செல்லப் பிராணிகளை பாதுகாப்பாக வளர்த்திட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று 7 மையங்களில் நடைபெற்ற முகாம்களில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
இதுவரை, மொத்தம் 10,820 செல்லப் பிராணி உரிமம் வழங்கப்பட்டுள்ளது.இந்த சிறப்பு முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) அன்று 7 மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.