பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அமித்ஷா நாளை தமிழகம் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: நெல்லையில் நாளை (22ம் தேதி) நடக்கும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நெல்லை வருகிறார். பாளை. ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அவரதுஹெலிகாப்டர் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஏற்கெனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி முதன் முதலாக தேர்தல் பணியை தொடங்கியது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவும் சட்டமன்ற தேர்தல் பணியை துவக்கும் வகையில் மண்டலம் வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக நெல்லையில் நாளை (22ம் தேதி) மாலை பாஜக பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜ நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதற்காக அமித்ஷா நாளை (22ம் தேதி) வெள்ளிக்கிழமை கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
நாளை காலை 10:45 மணிக்கு கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயார்டி ஹோட்டலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு பாலாரிவட்டம், ரெனை கொச்சின் ஹோட்டலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பின்னர் கேரள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பிற்பகல் 2 மணிக்கு கொச்சி விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் புறப்படுகிறார். 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைகிறார். மாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடை வந்தடைகிறார்.
தொடர்ந்து மாலை 3.25 மணிக்கு நெல்லை தச்சநல்லூர், பைபாஸ் சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.
மாலை 4.55 மணிக்கு நெல்லை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 5.15 மணிக்கு பாளை. ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு புறப்படுகிறார். மாலை 5:35 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.