7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைந்து வெல்வோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆகஸ்ட் 7ல் கலைஞர் நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் திமுகவினர் கடலென திரள வேண்டும். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைய உறுதியேற்போம். எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவோ, அடங்கி ஒடுங்கி பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் தமிழர் விரோத, மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம்.
தமிழே உயிராக, தமிழர் வாழ்வே மூச்சாக, தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு தமிழினத் தலைவராக மக்கள் மனங்களில் நிறைந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர். இயற்கை அவரை நம்மிடமிருந்து பிரித்து 7 ஆண்டுகளானாலும் வாரத்தின் 7 நாட்களும் தலைவர் கலைஞரின் நினைவுகளுடன்தான் கழக உடன்பிறப்புகளின் பொழுது விடிகிறது. எந்நாளும் நம்மை இயக்கும் ஆற்றலாகத் திகழ்பவரும் முத்தமிழறிஞர் கலைஞர்தான்
தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் தலைவர் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான்
தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் பழனிசாமி. சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் - கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக! திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க