பக்ரித் பண்டிகை தொடர் விடுமுறை; 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! போக்குவரத்து துறை தகவல்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக் கிழமை அன்று 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் தலா 15 பேருந்துகளும் ஆக 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி , திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 10,894 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,957 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 5,926 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.