ஐயப்பன் அறிவோம் 1: ஏன் கார்த்திகை முதல் தேதி?
கார்த்திகை மாதம் இன்று பிறக்கிறது. பொதுவாக, கார்த்திகை என்றாலே தீபத்திருவிழா மனதில் தோன்றும். மற்றொன்று இன்னும் முக்கியமானது. அதுதான் சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதம் துவக்கும் நிகழ்ச்சி. அந்தவகையில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று முதல் ஐயப்பனுக்கு, பல லட்சம் பக்தர்கள் மாலையிட்டு விரதத்தை துவக்குவர். ஏன் ஐயப்பனுக்கு கார்த்திகையில் மாலையிட வேண்டும்? இது ஒரு நல்ல கேள்வி. பொதுவாக, சபரிமலை ஐயப்பன் தரிசனத்தில் மகரஜோதி தரிசனம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு கார்த்திகை முதல் தேதியில் விரதம் துவக்குவதே சரியாக இருக்கும் என்ற அடிப்படையிலே துவக்கப்பட்டது என்கின்றனர் ஆன்மிக பெரியவர்கள். சரி... விரதம் பற்றி விபரமாக பார்ப்போம். ஐயப்ப விரதம் இருப்பவர்கள் ஒரு மண்டல விரதம் இருக்க வேண்டும். சபரிமலை கணக்கின் படி, இது 41 நாட்கள். சாஸ்திரத்தின் படி 45 நாட்கள். சித்தர்கள், ஞானிகள் கூற்றின்படி 48 நாட்கள் என கூறுகின்றார். ஆனால், 41 நாட்களாவது கட்டாயம் விரதம் இருப்பது மிகச்சிறந்தது. இன்று மாலையிடுபவர்கள், முதலாவதாக, குருசாமியை பற்றிப் தெரிந்து கொள்வது முக்கியம்.
இடைவிடாமல் 18 ஆண்டுகள் சபரிமலை செல்பவர் குருசாமி ஆவார். இவர்தான் தன்னை சபரிமலை அனுபவத்தில் இளைய சாமிகளுக்கு மாலை அணிவிப்பார். சாமிகள் அணிந்து கொள்ளும் மாலையானது 54 அல்லது 108 என்ற துளசி அல்லது ருத்திராட்ச மணியை கொண்டது. இதில் ஒன்று கூடவோ, குறையவோ கூடாது. அடுத்ததாக கன்னி சாமி. முதன்முதலில் மாலை அணிபவரை இவ்வாறு அழைக்கின்றனர். இவர் ‘கன்னிசாமி’ அடையாளத்திற்காக கருப்பு வேட்டி கட்டவேண்டும். இவர் சபரிமலை செல்ல குடும்பத்தினரின் சம்மதம் கட்டாயம் வேண்டும்.
அதன் பிறகு, கோயிலுக்கு சென்று, குருசாமியை வணங்கி, இறைவனிடம் வைத்த மாலையை பெற வேண்டும். இந்த இருவரை தாண்டி, தொடர்ந்து செல்பவர்களும் உண்டு. 18 ஆண்டுகள் தொடர்ந்து சென்றால் நற்பலன்கள் உண்டு. மாலை அணிந்ததும், பார்க்கும் நபர்களிடம் சாமி சரணம் சொல்லியே பேச்சைத் துவங்க வேண்டும். விரதத்தில் சைவம் மிக மிக கட்டாயம். கேக் கூட தொடக்கூடாது. கடினமான இந்த ஐயப்ப விரதத்தை, கடைபிடித்தல், விரதம் விடும் முறைகளை இனி விரிவாக பார்க்கலாம். தரிசனம் தொடரும்