அய்யம்பாளையம் மருதாநதி அணை 2 மாதமாக ‘ஃபுல்’; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால், கடந்த 2 மாதங்களாக அணை முழு கொள்ளளவுடன் உள்ளது. மேலும், தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில்:
‘அணையில் தற்போது 190 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை முழு கொள்ளளவுடன் உள்ளதால், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அணையின் உபரிநீரால் கோம்பைபட்டி கண்மாய் நிரம்பியுள்ளது. தற்போது வாடிப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல்போக பாசனம் துவங்குவதற்கு முன்பாக அனைத்து கண்மாய், குளங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.
மருதாநதி அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளதால், அணையை சுற்றியுள்ள கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.