ஆவடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி
ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராமில் நேற்றிரவு தண்டவாளத்தை கடந்த விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் கடை நடத்தி வருபவர்மீது மின்சார ரயில் வேகமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி, காந்தி நகரில் விளையாட்டு மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை சரத் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு விற்பனை முடிந்து கடையை பூட்டிவிட்டு வீடு திரும்புவதற்காக, அங்குள்ள ரயில் தண்டவாளத்தை சரத் கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற மின்சார ரயில், தண்டவாளத்தை கடந்த சரத்தின்மீது வேகமாக மோதியது.
ரயில் மோதியதில் சரத் அடிபட்டு உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். அங்கு சரத்தின் சடலத்தை கைப்பற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.