ஆஸியுடன் 2வது ஓடிஐ தென் ஆப்ரிக்கா அமோக வெற்றி: தொடரை கைப்பற்றியது
மேக்கே: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்ற நிலையில், மேக்கே நகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் அய்டன் மார்க்ரம் (0 ரன்), ரையான் ரிக்கெல்டன் மோசமாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்த டோனி டி ஸோர்ஸி பொறுப்புடன் ஆடி 38 ரன் எடுத்தார். அதன் பின், பிரீட்ஸ்கியும், டிரிஸ்டன் ஸ்டப்சும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரீட்ஸ்கி 88 ரன்னிலும், ஸ்டப்ஸ் 74 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 49.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 277 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
அதையடுத்து, 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலும், பின் வந்த மார்னஸ் லபுஷனே 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர். அவர்களை தொடர்ந்து கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்னில் நடையைக் கட்டினார். பின் வந்தோரில் கேமரூன் கிரீன் 35 ரன், ஜோஷ் இங்லீஸ் 87 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதன் பின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால், 37.4 ஓவரில் ஆஸி 193 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், 84 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக, 5 விக்கெட் அள்ளிய தென் ஆப்ரிக்காவின் லுங்கி நிகிடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஒரு நாள் போட்டி வரும் 24ம் தேதி நடக்கவுள்ளது.