ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி ஜாமீனில் வந்தவரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதம்
ஈரோடு : ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்து, கைதாகி ஜாமீனில் வந்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு கொங்கம்பாளையம் எல்விபி நகரை சேர்ந்தவர் அழகர் சாமி (46). பைனான்ஸ் தொழிலும், ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
இத்தொழிலில் பங்குதாரராக அவரது மகள் மாரியம்மாள் என்ற கனிகாஸ்ரீ (26) இருந்து வந்தார். இவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தி, அந்த தொகையை ஏலம் எடுத்தவர்களுக்கு வழங்காமல், அதிக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் சீட்டு தொகையை கடனாக வாங்கியுள்ளார்.
ஆனால், இருவரும் ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணத்தை திருப்பி தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஜனவரி மாதம் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் அழகர்சாமி மற்றும் அவரது மகள் மாரியம்மாள் இருவரும் சேர்ந்து 60 பேரிடம் ஏலச்சீட்டு நடத்தி அந்த தொகையை கடனாக பெற்றதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மாரியம்மாள் என்ற கனிகாஸ்ரீயை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அழகர்சாமி ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதில் அவர் ஜாமீன் பெற்று ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே அழகர்சாமி அவரது வழக்கறிஞருடன் இருப்பதை, அவரிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று பார்த்து, அழகர்சாமியை சூழ்ந்து எப்போது பணம் தருவாய் என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அழகர்சாமியை அவரது வழக்கறிஞர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், அழகர்சாமியின் வழக்கறிஞரிடம் விவரத்தை கேட்டு, பாதிக்கப்பட்டவர்களை எஸ்பி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுங்கள், அழகர்சாமி அங்கு தான் வந்து கையெழுத்திடுவார் என கூறி அனுப்பி வைத்தனர்.
போலீசாருடன் வாக்குவாதம்:
அழகர்சாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று ஈரோடு எஸ்பி அலுவலகம் வந்து, அழகர்சாமிக்காக காத்திருந்தனர். ஆனால், அழகர்சாமி ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பஸ் ஏறி சென்றதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் எஸ்பி அலுவலக வளாகத்தில் நின்று கூச்சலிட்டபடி இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், குற்றப்பிரிவு டிஎஸ்பி சண்முகசுந்தரம், டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் நேரில் வந்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில்,“அழகர்சாமியிடம் 30 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. ஒரு வீடு இருப்பதாக கூறுகின்றனர். அதனை விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.
இவ்வளவு தான் அவரது சொத்து மதிப்பு. எனினும் பினாமி பெயரில் நகை, சொத்து இருந்தால் அவற்றை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுவை போலீசார் பெற்று, அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் எஸ்பி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.