நாகை மீனவர்கள் 12 பேர் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்
நாகை: நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான மூன்று பைபர் படகுகளில் 12 மீனவர்கள் கடந்த 10ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அதிவிரைவு பைபர் படகு மூலம் எல்லை தாண்டி அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களை கல் மற்றும் பைப், கயிறு கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மூன்று மீனவர்கள் படுகாயம், மீதமுள்ள மீனவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகின் எஞ்சின், வலை, ஜி.பி.எஸ். உள்ளிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.