விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு; புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்: போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சியை நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி அங்கு வந்திருந்தார். அப்போது டிஜிபி அலுவலக நுழைவு வாயிலில் 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கியது.. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாக சில கருத்துகள் தெரிவித்ததாகவும்,
அதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருமாவளவனின் பட்டியலின சமூக விரோத போக்கை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறேன். திருமாவளவன் என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். இதுபற்றி 2 முறை போலீசில் புகார் அளித்தேன். திருமாவளவன் லூங்கி கட்டிக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு பெசன்ட் நகருக்கு ஆட்டோவில் தனியாக வருவது எனக்கு தெரியும். என் வீடு பெசன்ட் நகரில் தான் இருக்கிறது. எனவே இந்த போக்கை திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.