என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; இந்த தாக்குதல் ஒருபோதும் என் மன உறுதியைப் பாதிக்காது: டெல்லி முதல்வர் ரேகா குப்தா
டெல்லி: "என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதல் ஒருபோதும் என் மன உறுதியைப் பாதிக்காது. முன்பைவிட அதிக ஆற்றலுடனும், அர்ப்பணிப்புடனும் உங்களுடன் பயணிப்பேன்" என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் சிவில் லைன்சில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில், மக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் திடீரென, ரேகா குப்தாவை தாக்கினார். இதனால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. இதில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரேகா குப்தாவை தாக்கிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்வரை தாக்கிய ராஜேஷ் பாய் கிம்ஜி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரேகா குப்தா தாக்கப்பட்டதாக டெல்லி பாஜக போலீசார் புகார் அளித்தது. ராஜேஷ் பாய் கிம்ஜி என்பவர் மனு கொடுப்பது போல் டெல்லி முதல்வர் வீட்டுக்கு வந்து ரேகா குப்தாவின் கன்னத்தில் அறைந்து, அவரது முடியை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். மூத்த தலைவரான ரேகா குப்தா தாக்கப்பட்டது பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதல் ஒருபோதும் என் மன உறுதியைப் பாதிக்காது என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "இன்று காலை பொது விசாரணையின் போது என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீது மட்டுமல்ல, டெல்லிக்கும் மக்களின் நலனுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதும் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான முயற்சியாகும்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனது அனைத்து நலம் விரும்பிகளும் தயவுசெய்து என்னை சந்திக்க கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் விரைவில் உங்களுடன் பணியாற்றுவதைக் காணலாம்.
இதுபோன்ற தாக்குதல்கள் என் மன உறுதியையும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியையும் ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது நான் முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களுடன் இருப்பேன்.
பொது விசாரணைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனது மிகப்பெரிய பலமாகும்.
உங்கள் மகத்தான அன்பு, ஆசீர்வாதம் மற்றும் நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.