சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தீவிரம் தமிழகத்தில் கூடுதலாக 6,000 வாக்குச்சாவடிகள்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் நடத்த திட்டம்
சென்னை: தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், தற்போதுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளை 74 ஆயிரமாக உயர்த்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதுதவிர, பீகார் போன்று தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இதுதவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்குச்சாவடி மையங்களை அதிகப்படுத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்நிலையில், ஒரு வாக்குச்சாவயில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் கூடுதலாக 6 ஆயிரம் புதிய வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் புதிதாக 6 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரிய வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதிக்க ஒரு வாரத்திற்குள் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு, பின்னர் இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு (கலெக்டர்களுக்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மேற்கொண்டு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்துள்ளனர். இதன்படி, அடுத்த ஒரு வாரத்திற்குள் அந்தந்த மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை பெற்று வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, புதிய பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த பணிகள் முடிந்ததும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் தமிழகத்தில் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும்போது சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து மாநில பாஜ அல்லாத கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தால் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், அனைத்துக்கட்சி தலைவர்கள் இப்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
* தற்போது, தமிழகத்தில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்ற நிலையை மாற்றி, 1000க்கு மேல் இருந்தால் கூடுதல் வாக்குச்சாவடிகளை நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
* தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்ந்துள்ளது.