அசாம் மாநில பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த வழக்கு: நீதி கோரி ஆதரவாளர்கள் சிறை முன்பாக போராட்டம்
அசாம்: அசாம் மாநில பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த வழக்கில் நீதி கோரி ஆதரவாளர்கள் சிறை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின்போது ஜுபின் கார்க் உயிரிழந்தார். ங்கப்பூரிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் அசாமில் மீண்டும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை செய்தபின், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஜூபீன் கார்க்கின் திடீர் மரணம் குறித்து சந்தேகங்களுக்கு விடை காண, எம். பி. குப்தா ஐபிஎஸ் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அமைத்துள்ளார்.
கூடுதலாக, கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் அதனை விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டது. இந்த மரண வழக்கில், முதலில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப் பட்டார்.அடுத்து வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப் பட்டனர்.
ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம் கனு மகந்தா இருவரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள சேகர் ஜோதி கோஸ்வாமி, திறமையான நீச்சல் வீரரான ஜுபின் கார்க் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணையில் கூறியுள்ளார்.மேலும், சிங்கப்பூரில் பான் பசுபிக் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சித்தார்த் சர்மாவின் நடத்தை சந்தேகத்திற்கிடமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், ஜூபின் கார்க்கின் உறவினரும் அசாம் காவல் துறை துணை கண்காணிப்பாளருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் ஜுபின் கார்க் நீரில் மூழ்கியதாகக் கூறப்படும் போது அந்தப் படகில் சந்தீபன் கார்க் இருந்ததாகக் கூறியுள்ள சிறப்பு புலனாய்வுத் துறை அந்தப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன.அசாம் கம்ரூப் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தீபன் கார்க் கைது ஜூபின் கார்க் மரண வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைத்துள்ளது.இதற்கிடையே ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், ஜுபின் கார்க் உயிரிழப்பு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அடைக்கப்பட்ட சிறை முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் பக்சா சிறைச்சாலை முன்பு ஜுபின் கார்க் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.