ஆசிய கோப்பை தொடர் இந்திய டி20 அணி 19ம் தேதி அறிவிப்பு
புதுடெல்லி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் பற்றிய அறிவிப்பு வரும் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆசியாவில் உள்ள 8 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் மோதும், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர், இந்தாண்டு டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
ஆசிய கோப்பை போட்டிகள், வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி, வரும் 10ம் தேதி துபாயில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. பின், செப். 14ம் தேதி பாகிஸ்தானையும், செப். 19ம் தேதி, ஓமனையும் எதிர்கொள்கிறது. இறுதிப் போட்டி, செப். 28ல் துபாயில் நடக்கவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெறும் வீரர்களை முடிவு செய்ய, வரும் 19ம் தேதி, இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான குழு ஆலோசனை நடத்துகிறது. அதைத் தொடர்ந்து, இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கில்லுக்கு கிடைக்குமா இடம்?
ஆசிய கோப்பை போட்டியில் ஆடும் இந்திய அணியில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர், பேட்டர்), திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம்பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணியில், இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் இடம்பெறுவாரா என்பதும், அப்படி இடம்பெற்றால் அவருக்கான இடம், பொறுப்பு என்னவாக இருக்கும் என்பதும், 19ம் தேதி நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. சுப்மன் கில்லும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆசிய கோப்பை போட்டியில் ஒரே சமயத்தில் இடம்பெறுவதும் கேள்விக்குறியே என நிபுணர்கள் கருதுகின்றனர். அப்படி இடம்பெறும் பட்சத்தில் அபிஷேக், சஞ்சு சாம்சனின் இடங்களில் சிக்கல் நேரலாம் என கூறப்படுகிறது.