எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதை எதிர்ப்பதை கலைஞர் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை: எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது உணர்வுபூர்வமான விஷயம், இதை எதிர்ப்பதற்கு கலைஞர் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.
அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். ஐஏஎஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிஷ்டவசமானது. எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்’ என்றார்.