கலைஞர் பல்கலை சட்டமசோதா விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இத்தகைய ஜனநாயக விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தற்போது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற செயலாகும்.
இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற நடவடிக்கையாகும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டாலும் அனுமதி கிடைக்கவில்லை. இனி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.