திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி
*கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நடந்த மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் பரிசு வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், 2177 பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.
இதில் 676 மாணவர்கள் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கலைத்திருவிழாவை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.
அதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அப்போது, கோலாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம், பறையிசை, தப்பாட்டம் குழு நடனம், பாடல், நாடகம் என பல்வேறு கலைத்திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் ஆகியவற்றை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
விழாவில், முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நாளை மற்றும் வரும் 1ம் தேதி நடக்கிறது.