ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு அவர் வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் ரவுடி நாகேந்திரன் உடல்நல குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவருடைய மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, சிறையில் உள்ள சதீஷ், சிவா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிவா மற்றும் சதீஷுக்கு வழங்கபட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மனதை செலுத்தாமல் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது என்பதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.