அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை: தீபாவளிக்கு மறுநாள் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகிறது, வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தீபாவளிக்கு மறுநாள் மேலும் காற்றழுத்தம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது மிகத்தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியுள்ளது.
அதே நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்றும் நீடித்தது. குறிப்பாக சென்னையில் நேற்று வெயிலையை பார்க்க முடியாத அளவுக்கு மழை பெய்த காட்சியை காண முடிந்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. அதே நேரத்தில் இன்று முதல் மேலும் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் நேற்று முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று காலை 5.30 மணி அளவில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகின்ற 21ம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 20ம் தேதி(தீபாவளி அன்று)தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் 22ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகப்பட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
கும்மிடிப்பூண்டி 16 செ.மீ, தேக்கடி (தேனி) 16 செ.மீ, பொன்னேரி 14 செ.மீ, காயல்பட்டினம் (தூத்துக்குடி), குன்னூர் தலா 12 செ.மீ, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கழுகுமலை (தூத்துக்குடி) தலா 11, நாலுமுக்கு (திருநெல்வேலி), தென்காசி, குன்னூர் , செங்கோட்டை, ஆயிக்குடிடியில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.