தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும்: சங்க நிர்வாகிகளிடம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
சென்னை: தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து தமிழக ஆசிரியர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆசிரியர்கள், மாணவர்களை இந்த அரசு காக்கும், அரணாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளது. அந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர், தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமா என்ற வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்தது. அந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிக்கவும், பதவி உயர்வுகள் பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். ஓய்வு பெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் உள்ள ஆசிரியர் பணியில் நீடிக்கலாம். அதற்கு மேல் பணியில் நீடிக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும். இல்லை என்றால் அவர்களை பணியில் இருந்து வெளியேற்றலாம் அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பலாம் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் தமிழ்நாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிழக்கும் அபாயம் உருவாகி உள்ளது. இது ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களை இந்த அரசு கைவிடாது என்று தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் சங்கங்களுடன், நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது. இதில், பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்றன.
அந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டபின், அன்பில் மகேஷ்பொய்யாமொழி சங்க நிர்வாகிகளிடம் பேசியதாவது:
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், ஆசிரியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. உங்களைக் பாதுகாக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். நாங்கள் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை உங்களிடமும், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளும் அடிப்படையில் ஒரு கருத்து பரிமாற்றம் என்ற வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது. சட்டம் மற்றும் அறிவிப்புகள் என்ன சொல்கிறது. அதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்பதற்காகவும், இங்கிருந்து பெறும் கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்து, ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்கலாம் என்றும் நினைக்கிறோம்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கல்வித்துறைக்கு ஒரு சவாலாகவே உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தான் எதிர்த்தது. வழக்கு தொடர்ந்ததும் தமிழ்நாடுதான். ஆசிரியர்கள் நலன், மாணவர்கள் நலனாக இருந்தாலும் அவற்றை காக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல, இந்த விஷயத்திலும் முதல் குரல் கொடுத்ததும் தமிழ்நாடுதான். 1-8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அந்த ஆசிரியர்களுக்கு ஒரு நெருக்கடி என்றால் அவர்களுக்கு அரணாக இந்த அரசு இருக்கும். என்னென்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை நீங்கள் சொன்னால் அதை நாங்கள் ஆலோசித்து செயல்படுத்த முடியும். சங்கங்களின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிறகு தமிழக முதல்வர் தொடர்ச்சியாக தொலைபேசியில் துறை சார்ந்து என்னிடமும் முதன்மைச் செயலாளர், சட்ட வல்லுநர்களிடம் என்ன செய்யலாம் என்றும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாமா, என்று சட்ட ரீதியாகவும், ஆசிரியர்களுக்கு ஏதாவது ஒரு சிறப்பு தேர்வு நடத்தலாமா என ஆலோசனை நடத்தினார். முதல்வர் கருத்தின்படி, ஆசிரியர்களின் மனநிலையை கேட்டறிய வேண்டும் என்றும் அவர்களை பாதுகாப்போம் என்றும் தெரிவிக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினார். அதன்பேரில் சங்கங்களை அழைத்து பேசினோம். அவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றை நாங்கள் உள்வாங்கியுள்ளோம்.
கட்டாய கல்வி உரிமைச்சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவை என்ன சொல்கிறது. அதற்கு தெளிவான விளக்கம் கொடுத்தால் போதுமா என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளின் மீதான சாதக பாதங்களை தெரிவித்துள்ளதுடன், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தை நாடவும் வழி வகைகள் செய்து வருகிறோம். 4ம் தேதியே ஆசிரியர்களை அழைத்து பேசி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளோம். பள்ளிக்கல்வியின் அடிப்படையே ஆட்டம் காணும் வகையில் இந்த தீர்ப்பு உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் சார்ந்து தீர்ப்பு வந்துள்ளது. மேல் முறையீடு செய்வதா அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதா என்பதை முதல்வர் முடிவு செய்வார். அதனால், இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து, சமூகம் சார்ந்து இதை எப்படி சமாளிப்பது என்றும் கருத்து தெரிவிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருக்கும் நமது முதல்வரிடம் பேசும் போது, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் அல்லது ஒன்றிய அமைச்சர்களிடம் எடுத்து செல்வோமோ என்ற வகையில் நான்கு அல்லது ஐந்து வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளோம். மற்ற மாநிலங்களில் உள்ள முதன்மைச் செயலாளர்களுடன் பேச வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சரின் ஒத்துழைப்பையும் கேட்க இருக்கிறோம். இதன் மூலம் நல்ல வழி பிறக்கும்.
நாம் நமக்கான கல்விக் கொள்கை கொண்டு வந்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறோம். அதனால், நமது கல்வி முறை தெளிவாக இருக்கின்ற நிலையில், ஆசிரியர்களை பாதுகாக்கும் வழிகளை ஆய்வு செய்து ஆசிரியர்களை நாம் பாதுகாப்போம். வழக்கறிஞர்களை கொண்டு வழக்கு தொடரவும் தயார் நிலையில் இருக்கிறோம். தற்ேபாது 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள். நமது அடித்தளம் 1-8ம் வகுப்புகள் தான். கண்டிப்பாக நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு இருக்கிறது. முன்னுரிமை அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல தீர்ப்பை பெற்றுத் தருவது அரசின் கடமை.
இவ்வாறு அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறினார்.
- உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழ்நாட்டில் 1.76 லட்சம் ஆசிரியர்கள் பணியிழக்கும் அபாயம்.
- அவர்களை பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிசீலனை.