அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
சென்னை: அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்துள்ள கூவத்தூர் பகுதியில் மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் குக்கும் என்ற பெயரில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பும், முன்பதிவு விவரங்களையும் ஏற்கனவே அனிருத் வெளியிட்டிருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
இதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் எனவே இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பனையூர் பாபு அவசர வழக்காக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று காலை அவரது தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே.மூர்த்தி முறையிட்டார். அதன்படி இந்த வழக்கை மதியம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏன் மனு தாக்கல் செய்யப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே.மூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத தகவல் இன்று காலை தான் தங்களுக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன். அனிருத் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறினார். மேலும் இந்த மனு விசாரணைக்கு உகந்ததாக இல்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை அடுத்து அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்குமாறு எழுந்த வழக்கில் நீதிபதி காவல்துறை விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இசை நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதி விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.