பாமக பிரிவுக்கு திமுக காரணமா? அன்புமணிக்கு கைக்கூலி பட்டத்தை அவரது தந்தையே தந்திருக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பதில்
சென்னை: கொளத்தூர் பூம்புகார் நகரில் நடந்து வரும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டுமான பணிகளையும் ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுமான பணிகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: வள்ளலாருக்கு உலகளவில் பெரிய மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் நடக்கும் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் மாநாட்டில் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வள்ளலார் மாநாட்டிற்கு பெரும்பாலான நபர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். கலந்து கொள்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமணி நேரம் கலந்துகொண்டு வள்ளலார் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். இவ்வாறு கூறினார்.
தைலாபுரத்தை திமுக டேக் ஓவர் செய்துவிட்டதாக கூறிய அன்புமணி குற்றச்சாட்டுக்கு, ‘இந்த உலகத்திற்கு உயிர் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திய நபரையே முழுமையான திருப்திகரமாக வைத்துக் கொள்ளாத சொற்களுக்கு எல்லாம் பதில் சொல்வதற்கு உண்டான தகுதியுடையவர்கள் அல்ல என்பது எனது கருத்து’ என்றார். பாமக பிரிவுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு அமைச்சர், ‘தந்தையார் கூற்றைப் பாருங்கள், அவரது தந்தையாரே கைக்கூலி என்ற பட்டத்தை அவருக்கு வழங்கி இருக்கிறார். அதனால் வேறு யாருக்கும் அவர் அந்த பட்டத்தை வழங்க தகுதி இல்லை’ என்றார்.