16 குற்றச்சாட்டுகள் பற்றி அன்புமணி விளக்கம் அளிக்க ஆக.31 வரை கெடு: பாமக நிறுவனர் ராமதாஸ்
விழுப்புரம்: 16 குற்றச்சாட்டுகள் பற்றி அன்புமணி விளக்கம் அளிக்க ஆக.31 வரை கெடு வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பாமகவில் 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை அளித்தது.
ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு கட்சிக்கு களங்கத்தையும், குழப்பத்தையும், பிளவையும் அன்புமணி ஏற்படுத்தியுள்ளார். ராமதாஸ் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது. அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் காலி நாற்காலி போட்டு ராமதாசை அவமானப்படுத்தியது உள்பட 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. அந்த அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாசிடம் சமர்ப்பித்த நிலையில் நேற்று அன்புமணியிடம் விளக்கம் கேட்டு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அன்புமணி விவகாரம் குறித்து விவாதிக்க தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தியது. 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ்; அன்புமணி மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் என்பது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.