சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதன் பங்குக்கு சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
சுங்கக் கட்டண உயர்வு ஊர்தி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும்.
இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அவர்களின் துயரங்களைக் குறைக்கும் வகையிலும் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.