அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்: ரஷ்யா காட்டம்
மாஸ்கோ: அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘இந்த பொருளாதார தடை என்பது இவை மிகப்பெரியவை. ரஷ்யாவின் 2 மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நீண்ட நாட்கள் நீடிக்காது என்று நம்புகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும்’ என்றார்.
அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிரந்தர அமைதி என்பது ரஷ்யாவை பொறுத்தது. இன்றைய நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தி துறைகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திர தீர்வை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளது. நிரந்தர அமைதி முற்றிலும் ரஷ்யாவின் நல்லெண்ண பேச்சுவார்த்தையை பொறுத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக, ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலுக்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டும். அமெரிக்க எங்கள் எதிர்போல் செயல்படுகிறது, அவர்களின் ‘அமைதி விரும்பி' தற்போது ரஷ்யாவுக்கு எதிரான போர் பாதையில் செல்கிறார். அமெரிக்கா ஏமாற்றப்பட்ட ஐரோப்பாவுடன் தன்னை கூட்டாளியாக இணைத்துக் கொண்டுள்ளது. உக்ரைனில் போரை நிறுத்த, ரஷ்யாவை கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் எதிர்மறையானவை என்று குறிப்பிட்டுள்ளார்.