30,000 பேரை வீட்டுக்கு அனுப்ப அதிரடி முடிவு.. வரலாறு காணாத ஆட்குறைப்பு நடவடிக்கை : அமேசான் ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி
வாஷிங்டன்: இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 30,000 பெருநிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சுமார் 27,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது அதைவிட பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது. இது அதன் மொத்த பெருநிறுவனப் பணியாளர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் (30,000) பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்புகள் மின்னஞ்சல் வாயிலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பணிநீக்கமானது மனிதவளப் பிரிவு, அமேசான் வலை சேவைகள் (ஏ.டபிள்யூ.எஸ்), சாதனங்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி ஏற்கனவே கூறுகையில், ‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதால், அதிக ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது என சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொரோனா காலத்தில் தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்டதால் ஏற்பட்ட செலவினங்களைக் குறைக்கவும், நிர்வாக அடுக்குகளைக் குறைத்து நிறுவனத்தை நெறிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய வர்த்தக மாற்றங்களால் மைக்ரோசாப்ட், மெட்டா, கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இதேபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.