கூட்டணிக்காக ராமதாசுக்கு அண்ணாமலை ஐஸ்
திருச்சி: திருச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரப்பதம் என்பது விவசாயிகளுக்கு எப்போதும் இருக்கும் பிரச்னை தான். அதிக மழை பெய்த போது ஒன்றிய அரசு நெல் ஈரப்பதத்தை 19.5 வரை தளர்த்தி உள்ளது. டிஜிபி தேர்வு விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையீடு இல்லை. தமிழகத்தில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். பாமக தலைவர் ராமதாஸ் மீது பிரதமர் நல்ல மதிப்பை வைத்துள்ளார். பாமகவுடன் கூட்டணி குறித்து கட்சி தலைவர்கள் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* டிடிவியுடன் திடீர் சந்திப்பு
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக டிடிவியை சந்தித்து பேசுவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்நிலயில், கரூரில் நேற்று நடந்த அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலையும், டிடிவியும் கலந்து கொண்டனர்.
அப்போது, இருவரும் அருகருகே அமர்ந்து, இரண்டு நிமிடம் தனியாக பேசினர். பின்னர் அண்ணாமலை, டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். பின்னர் வெளியே வந்த டிடிவி நிருபர்களிடம் கூறுகையில், ‘அண்ணாமலையுடன் அரசியல் ஏதுவும் பேசவில்லை. விஜயுடனான கூட்டணி குறித்து வரும் ஜனவரியில் தான் தெரியவரும்’ கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.