ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவில் தலையிட முடியாது’’ எனக்கூறி அமலாக்கத்துறையின் மனுவை கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது.
இந்தநிலையில் அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்திருந்த புதிய மனு உச்ச நீதிமன்றத்தில் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘ ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவித மாற்றமும் கிடையாது’’ எனகூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.