ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக உத்தரவு!
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இந்த வழக்கில் பின்னணி பார்க்கும்போது, டாஸ்க்மார்க் முறைகேடு புகார் தொடர்பாக சினமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையினரிடம் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாக கூறி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயங்குனர் விகாஸ் குமார் செப்டெம்பர் 17ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே காணொளி மூலமாக ஆஜரான எஸ்.பி. ராஜு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகி இருந்தார். அவர் பதில் மனுத்தாக்கல் செய்யாததற்கு ரூ.30,000 அபராதம் விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி 17ம் தேதி ஒத்திவைத்தார்.