சென்னை விமானநிலையத்தில் இருந்து சிறுசேரிக்கு ஏசி மின்சார பேருந்து சேவை துவக்கம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று ஓஎம்ஆர் சாலையில் சிறுசேரி தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிர்சாதன மின் பேருந்து சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் விமானப் பயணிகளின் வசதிக்காக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மற்றும் சென்னை விமான நிலையம் முதல் அக்கரை பகுதி வரை 2 வழித்தடங்களில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகள் விமான பயணிகளுக்கு பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தில் இருந்து பிற வழித்தடங்களிலும் மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, நேற்று முதல் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிர்சாதன மின்சார பேருந்து சேவையை மாநகர போக்குவரத்து கழகம் துவங்கியுள்ளது. இந்த மாநகர குளிர்சாதன மின் பேருந்து, விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 6 நடைக்கு மேல் பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்க்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் சோழிங்கநல்லூர் வழியாக சிறுசேரி தொழிற்பேட்டைக்கு இயக்கப்படுகிறது. இவை, விமான பயணிகளின் பயண நேரத்தை சொகுசாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இப்பேருந்து விமானப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இதேபோல் இன்னும் பல்வேறு வழித்தடங்களில் குளிர்சாதன மின்பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.