அதிமுக மூழ்கும் படகு: அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்
சென்னை: அதிமுக தற்போது மூழ்கும் படகாக உள்ளது என அமைச்சர் மனோதங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார். சிங்கப்பூரை சேர்ந்த சிங்கெல்த் (Singhealth) மற்றும் க்ளோஸெல் சார்பில் குடும்ப மற்றும் மகளிர் நலத்தை மையமாக கொண்டு கேரிங் பார் யுவர் ஹெல்த் என்ற சுகாதார விழிப்புணர்வு கலந்தாய்வு தேனாம்பேட்டையில்நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் சிங்கப்பூர் குடியரசின் தூதர் எட்கர் பாங் த்ஸீ சியாங் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: எஸ் ஐ ஆர் பல மாநிலங்களில் திட்டமிடப்பட்டு தேர்தல் சதியாக நடத்தி வருகிறார்கள். இதனை தடுத்த நிறுத்த வேண்டும். அந்த பணிகள் நடந்துகொண்டு இருக்கிறது, எந்த தாக்குதல் வந்தாலும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம். உண்மையிலேயே மிகப்பெரிய சதி தான் எஸ் ஐ ஆர் என பொதுமக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும், ஏனென்றால் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையம் செய்த தவறுகளால் தான் தற்போது அவர் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார் என அனைத்து தவறுகளையும் ராகுல் காந்தி வெளிக்கொண்டு வருகிறார். இந்த எஸ் ஐ ஆர் - ரை அனைத்து கட்சிகளும் எதிர்த்து வருகிறது, அதிமுக துணிவு இருந்தால் எஸ்.ஐ.ஆர் தவறு என்று சொல்ல வேண்டும் அதனை சொல்ல அவர்களுக்கு ஏன் தைரியம் இல்லை.
அதிமுக தற்போது மூழ்கும் படகாக உள்ளது, பாஜக ஒரு பக்கம், உட்கட்சி பிரச்சனை ஒரு பக்கம் என்று என்ன செய்வது என்று தெரியாமல் எது வேண்டும் என்றாலும் சொல்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் ஜனநாயகத்திற்கு மேல் தொடுக்கப்படும் ஒரு யுத்தம். எனவே அதிமுக மனசாட்சியுடனும் நேர்மையுடனும் எஸ் ஐ ஆர் வேண்டாம் என்று இருக்க வேண்டும். அதனை சொல்லாமல் இருப்பது தவறு.
தமிழகத்தில் பால்வளத்துறை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து நல்ல முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அளவு கடன் வழங்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் பால்வளத்துறையில் அரசு ஏற்படுத்தி இருக்கக்கூடிய சாதனையினை பட்டியலிட்டு வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.