அதிமுக தலைவர்கள் இடையே காவடி தூக்குவதில் போட்டி பாஜவால் தோற்றோம் என பேசிய சி.வி.சண்முகம் இப்போது ‘ஜிங் ஜக்’
* எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்தாச்சு... மோடியை தூக்கி பிடிச்சாச்சு... ‘நீ யாருடா கட்சியில் சேர்க்க சொல்ல’ என்று ஓபிஎஸ், டிடிவி மீது தாக்கு
விழுப்புரம்: பாஜவால் தோற்றோம் என பேசிய சி.வி.சண்முகம், இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து மோடியை தூக்கி பிடித்து ‘ஜிங் ஜக்’ அடித்து வருவதை நெட்டிசன்கள் கலாய்து வருகின்றனர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையனுடன் சென்று வலியுறுத்திய சி.வி.சண்முகம், தற்போது நீ யாருடா கட்சியில் சேர்க்க சொல்ல என்று ஓபிஎஸ், டிடிவி மீது ஒருமையில் கடுமையாக விமர்சித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக தெருமுனைபிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் எம்பி பேசுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்று பலமுறை பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். தற்போது அனைத்து பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் விலை குறைந்ததற்கு காரணம் அதிமுகதான்.
தமிழகத்தில் இன்று அதிமுக, பாஜ கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் 11 ஆண்டுகாலம் ஆண்டு கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. உலகமே திரும்பி பார்க்கக்கூடிய தலைவர் மோடி. பாகிஸ்தானை அந்நாட்டிற்குள்ளேயே சென்று அடித்து நொறுக்கியவர்தான் மோடி. மோடியைபற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதிகிடையாது. எப்ப பார்த்தாலும் டிவியில் அதிமுக, பாஜ கூட்டணி குறித்தே விவாதிக்கிறார்கள்.
கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். உங்களுக்கு எங்க நோவுது. பிரிந்து சென்றவர்களை (ஓபிஎஸ், டிடிவி, சசிகலா) இணையுங்கள் என்று கூறுகிறார்கள். நீ யாருடா எங்களை இணைக்க சொல்வதற்கு. கட்சியில் நீக்கப்பட்டவரை, அவர் செய்த துரோகத்திற்காக நீக்கப்பட்டவரை, அவருக்கு அடையாளம் கொடுத்து, பதவி கொடுத்து அழகு பார்த்த அந்த அதிமுகவை காலால் எட்டி உதைத்தவர்களை கட்சியிலிருந்து நீக்கினோம். அவர்களை சேர்க்கனும் சொல்வதற்கு நீ யாருடா?.
அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’ என்றார். கடந்த சட்டமன்றதேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியடைந்தோம் என்று கூறிய சி.வி.சண்முகம், அப்போது பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். தற்போது சட்டமன்ற தேர்தலில் வர உள்ள நிலையில், மீண்டும் அதிமுக-பாஜ கூட்டணி ஏற்பட்டுள்ளதால் பாஜவை விமர்சித்த அதே சி.வி சண்முகம் புகழ்பாட தொடங்கியுள்ளனர்.
அதிமுகவின் புகழ்பாடுவதை விட பாஜவையும், பிரதமரையும் தூக்கி பிடித்து புகழ்பாடி பேசியிருக்கிறார். சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழ் பாடுவதை விட அவர்கள் சிறுமைப்படுத்தி, பாஜ தலைவர்களுக்கு காவடி தூக்கி அவர்களை பெருமையாக பேசுவதில் போட்டி போட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, பேசமா அதிமுகவை பாஜவுடன் இணைத்து விட்டு, பாஜ தலைவர்களுக்கு ஜிங் ஜக் அடிக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல், அதிமுகவில் சமீப காலமாக பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு10 நாள் கெடு விதித்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘இந்த கருத்தை மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நந்தம் விஸ்வநாதன், அன்பழகன் ஆகியோருடன் நானும் சென்று எடப்பாடி சந்தித்து பேசினோம். ஆனால் அவர் ஏற்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையனின் கருத்தை சி.வி.சண்முகம் மறுக்கவில்லை. இந்த சூழலில், அதிமுக இணைப்பு பஞ்சாயத்து டெல்லி வர சென்றது. அவர்கள் உத்தரவுக்கு இணங்க அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றனர். ஆனால் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இந்நிலையில், எடப்பாடி ஆதரவாளராக உள்ள சி.வி.சண்முகம் இணைப்பு விவகாரத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து ஓபிஎஸ்சை ஒருமையில் கடுமையாக விமர்சித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.