அதிமுக ஒருங்கிணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடியை ஓரங்கட்ட திட்டம்? டெல்லியில் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்; சென்னையில் அடுத்த வாரம் பஞ்சாயத்து நடக்கிறது
சென்னை: உடனே வரும்படி அமித்ஷா அழைத்ததால், ரகசியமாக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு உள்துறை அமைச்சரின் வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதியவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் அடுத்த வாரம் சென்னைவரும் அமித்ஷா, இது குறித்து பஞ்சாயத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.
ஆளும் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கும், நல்ல பெயரும் உள்ளதால், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து அலைபாய்ந்து வருகிறது. இதனால், அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷா இந்த வார இறுதி அல்லது 2வது வாரத்தில் சென்னைக்கு வருகிறார். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது மீண்டும் இரு கட்சிகளும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நெருக்கம் காட்டி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா சென்னை வந்து அதிமுக தலைவர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், அதிமுக மற்றும் பாஜ தலைமையிடையேயான முக்கிய பேச்சுவார்த்தை டெல்லியில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘பாஜ மற்றும் அதிமுக உயர்மட்ட தலைவர்கள் டெல்லியில் சந்திக்க உள்ளனர். கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்க வேண்டும், இடங்கள் எப்படி பங்கிடப்பட வேண்டும் என அனைத்து விஷயங்களும் பேசப்படும். அடுத்த 10 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும்’’ என்றார். அமமுக தலைவர் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று தற்போது தெரிகிறது.
டிசம்பர் 6 முதல் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தர்மபுரி ஆகிய இடங்களில் தினகரனுக்கு ஏற்கனவே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் அவர் சென்னை சந்திப்பில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணியின் தலைவராகவோ, முதல்வர் வேட்பாளராகவோ ஏற்க முடியாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது அவருக்கு பெரும் அவமானமாக இருந்தது. இதனால் அவர் கூட்டணியை விட்டு வெளியேறினார்.
அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு தினகரனும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரும் தனித்தனியாக கட்சியை வழிநடத்தி வருகின்றனர். இந்த இரண்டு பிரிவுகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டுகின்றன. வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ராமதாஸ் தன் மகன் அன்புமணி கூட்டணியில் இருப்பது குறித்து எந்த எதிர் கருத்தும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அன்புமணிக்கு தந்தையுடன் ஒரே மேடையில் நிற்பதில் தயக்கம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குடும்பத்தில் அதிகாரப் போராட்டம் தொடங்கிய பிறகு, ராமதாஸ் தன் மகனை பகிரங்கமாகவும் கடுமையாகவும் விமர்சித்து வருகிறார். இது அன்புமணிக்கு பெரும் அசெளகரியத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பாஜக இந்த இரு பிரிவுகளையும் எப்படி கையாளும் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும். அதிமுக தலைவர்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக கூறியுள்ளனர். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுக்களுடன் எந்த விதமான இணைப்பும் இருக்காது. ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்கள் மீண்டும் அதிமுகவுடன் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. இது அதிமுக தலைமையின் உறுதியான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது. பாஜக இந்த வெளியேற்றப்பட்ட பிரிவுகளுடன் தனித்து கூட்டணி அமைக்குமா அல்லது அதிமுகவின் விருப்பத்திற்கு மரியாதை கொடுக்குமா என்பது தெரியவில்லை.
அடுத்த 10 நாட்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. யார் யாருடன் இணைகிறார்கள், இடங்கள் எப்படி பகிரப்படும், கூட்டணியில் யார் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது விரைவில் தெளிவாகும். இந்த வார இறுதியில் அமித் ஷாவின் சென்னை பயணம் தமிழக அரசியலின் எதிர்கால அரசியல் கூட்டணியை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான சந்திப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் அமித்ஷா அழைப்பின்பேரில், ஓ.பன்னீர்செல்வம் திருவனந்தபுரத்தில் இருந்து ரகசியமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மாலை 3 மணிக்கு டெல்லியில் இறங்கியவர், அதன்பின்னர் பதுங்கு குழியில் பதுங்குவதுபோல மாயமானார். அதேநேரத்தில், அதிமுக உடைப்புக்கு காரணமாக இருந்த ஆடிட்டர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து இரவு உள்துறை அமைச்சரின் இல்லத்தில் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆடிட்டர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது பி.எல்.சந்தோசும் இருந்துள்ளார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைப்பது அல்லது புதுக்கட்சி ஆரம்பித்து பாஜக கூட்டணியில் இணைவது என்று பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு எடப்பாடி சம்மதிக்க வேண்டும். அவர் சம்மதிக்காத பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றிவிட்டு, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வது குறித்தும் அப்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் திட்டத்துக்கு வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அனைவரும் சம்மதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து டிடிவி தினகரனையும் சென்னை வரும்போது சந்தித்துப் பேச அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதனால் அடுத்த வாரம் சென்னை வரும்போது அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* செங்கோட்டையன் பற்றி பேச ஒன்றுமில்லை
ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி, அமித்ஷாவிடம் விவாதித்து விட்டு வந்திருக்கிறேன். அப்போது செங்கோட்டையனைப் பற்றி பேசுவதற்கு தேவை ஏற்படவில்லை. அமித்ஷாவிடம் பேசியது அனைத்தையும் இப்போது உங்களிடம் சொல்லி விட்டேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.