அதிமுகவுக்கு அவமானமாக இல்லையா; எடப்பாடியின் எந்த சதி திட்டமும் அரசின் சாதனைகள் முன் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்பூர்: அனைத்து துறைகளின் கோட்டைதான் உடுமலைப்பேட்டை என்று உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் உரையாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1,426.89 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 19,785 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: அனைத்து துறைகளின் கோட்டைதான் உடுமலைப்பேட்டை. தியாகிகளின் திருவுருமான திருப்பூர் குமரன் தோன்றிய மாவட்டம் திருப்பூர். சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு எல்லாம் சர்க்கரையை அள்ளி தரும் இனிப்பான ஊர் திருப்பூர். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.588 கோடியில் சாலைப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 133 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 5 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 328 திருக்கோயில்களில் 804 சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. 9 உயர்மட்ட பாலங்கள் அறிவிக்கப்பட்டு, 3 பாலங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. திருப்பூரில் நியோ டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சியில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தலைமை அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தவுள்ளோம். சிவன்மலை, நஞ்சியம்பாளையத்தில் மினி விளையாட்டு அரங்கம்.
ரூ.1176 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. முத்தூர், காங்கேயம் உள்ளடங்கிய 1,790 குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காங்கேயம், வெள்ளக்கோவில் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ரூ.10,490 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வளவு சாதனைகளையும் 4 ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்துக்கு செய்துள்ளோம். அத்திகடவு -அவிநாசி திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் பணிகளை விரைவுபடுத்தி முடித்து காட்டினோம். திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்
நீராறு, நல்லாறு, ஆனைமலை ஆறு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம், ஆழியாறு பாசனப்பகுதி வாய்க்கால்கள் தூர்வாரப்படும். திருப்பூர் மாநகராட்சியில் ரூ.9 கோடியில் நவீன வசதிகளுடன் மாவட்ட மையம் நூலக கட்டபடும். காங்கேயத்தில் ரூ.11 கோடியில் புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ரூ.6.5 கோடியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்.
எடப்பாடியின் அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில்தான் மேற்கு மாவட்டங்களுக்கு திட்டங்கள் அதிகம். எந்த தைரியத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கினார் என்பது தெரியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி மேற்கு மண்டலத்தில் தொடங்கும். ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கியது.
நீதிமன்றம் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது அதிமுகவுக்கு அவமானமாக இல்லையா. மக்கள் நலன் திட்டங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் சென்றது அதிமுக. விரக்தியின் உச்சத்துக்கே எடப்பாடி பழனிசாமி சென்றுவிட்டார். எடப்பாடியின் எந்த சதி திட்டமும் அரசின் சாதனைகள் முன் எடுபடாது. திமுக அரசை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானதை பார்த்து பார்த்து செய்து வருகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.