கணவரின் பெண்கள் தொடர்பை கேட்டு திட்டியதால் அதிமுக மாஜி கவுன்சிலர் மனைவி குத்திக்கொலை: சரண் அடைந்த டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
கோவை: கணவரின் பெண்கள் தொடர்பை கேட்டு திட்டியதால் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சரண் அடைந்த கார் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை துடியலூர் அருகே தாளியூர் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கவிசரவணகுமார் (49). பன்னீர்மடை முன்னாள் ஊராட்சி தலைவர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்.
இவரது மனைவி மகேஸ்வரி (46). இவரது மகன் சஞ்சய் (21). கல்லூரியில் 2ம் ஆண்டும், மகள் நேத்ரா (15) 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் கார் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (49) வேலை செய்துள்ளார். அவர், நேற்று மதியம் வடவள்ளி போலீசில் சரணடைந்து அதிமுக மாஜி கவுன்சிலர் மனைவி மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
விசாரணையில் கொலை நடந்த இடம் தடாகம் போலீஸ் எல்லைப்பகுதி என்பதால் அந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தடாகம் போலீசார் மகேஸ்வரியின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். எஸ்.பி. கார்த்திகேயன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது 7 இடத்தில் கத்திக்குத்து விழுந்திருந்தது தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் சரணடைந்த சுரேசிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் கவிசரவணகுமார் வீட்டில் கடந்த 10 ஆண்டாக டிரைவராக உள்ளேன். மனைவி மகேஸ்வரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கவிசரவணக்குமார் பிரிந்து சென்று வடவள்ளியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இருவருக்கும் நான் தான் கார் டிரைவர். கவிசரவணகுமார் பல பெண்களிடம் தொடர்பில் இருப்பது குறித்தும் இதற்கு நீ தான் காரணம் என்றும் அடிக்கடி மகேஸ்வரி என்னிடம் தகராறு செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்தபோது மகேஸ்வரி என்னை அழைத்து கணவரின் பெண்கள் தொடர்பு குறித்து கேட்டு தகராறு செய்ததோடு திட்டியதால் கோபத்தில் கத்தியை எடுத்து மகேஸ்வரியை குத்தி கொலை செய்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். மேலும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்த நேரத்தில் சுரேஷை தவிர யாரும் வந்து செல்லவில்லை என்பது தெரியவந்தது. கணவன், மனைவி பிரிந்து வாழ்வதற்கு முக்கிய காரணமே கவிசரவணகுமார் பல பெண்களிடம் தொடர்பில் இருப்பது தான் என்று கூறப்படுகிறது. இந்த அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா என்று போலீசார் அவரிடமும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.