கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ-யை பயன்படுத்துவோம்: நடிகை ராஷ்மிகா கருத்து
மும்பை: ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பிரபல நடிகை ராஷ்மிகா தனது வேதனையையும் ஆதங்கத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில், “எப்போது உண்மைகள் உற்பத்தி பொருளாக மாறுகிறதோ, பகுத்தறிவுதான் நமக்கு சிறந்த பாதுகாப்பு. ஏஐ என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும், ஆனால் அதை தவறாக பயன்படுத்துவதும், பெண்களை குறிவைக்கும் ஆபாச கருவிகளாகவும் பயன்படுத்துவது சிலரிடம் தார்மீக பொறுப்பற்ற தன்மை உருவாக்கி இருப்பதை காட்டுகிறது. இணையம் இனி உண்மையின் கண்ணாடி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எதையும் புனையக்கூடிய ஒரு வரைதிரை. தவறான பயன்பாட்டை தாண்டி, மிகவும் கண்ணியமான மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ-யை பயன்படுத்துவோம். பொறுப்பற்ற தன்மையை விட பொறுப்பை தேர்வுசெய்க.
மனிதர்கள் மனிதர்களை போல செயல்பட முடியாவிட்டால், அவர்களுக்கு கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை ஏஐ-ஆல் டீபேக் செய்த வீடியோ கடந்த சில வருடங்களுக்கு முன் வைரலானதை தொடர்ந்து அமிதாப் பச்சன் முதல் தேசிய அளவில் பல பிரபலங்களும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக களமிறங்கி கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து இணையவாசிகள் அத்துமீறி வருவதாக சைபர் கிரைமை டேக் செய்து போஸ்ட் ஒன்றை நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார்.