40 வயதிலும் கல்லூரியில் சேரலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் சங்கர் வெளியிட்ட அரசாணை: கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு 21. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) கலை அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து வயது விதி தளர்வு கோரி கல்லூரி முதல்வர்கள் மற்றும் இணை இயக்குநர் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், எனவே, ஆர்வமுடைய மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என நிர்ணயித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான கல்லூரி கல்வி ஆணையரின் கருத்துருவை ஆய்வு செய்து 2025-26ம் கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும் (45 வயது வரை), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் (43 வயது வரை) அளித்து அரசு ஆணையிடுகிறது.