மீண்டும் வாக்குச்சீட்டு
நாடு முழுவதும் தேர்லில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்ைட முன்வைத்தார். பெங்களூரு மத்திய தொகுதியிலும் வாக்குத்திருட்டு நடந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இதையடுத்து பீகாரில் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் மேற்கொண்டா்ர். பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை நீக்குவது. அந்த தொகுதியில் வசிக்காமல் இடம்மாறியவர்கள் பெயர்களை நீக்குவது என்பது வழக்கமான நடைமுறை தான் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. ஆனால் இதில் திருப்தி அடையாத காங்கிரஸ் வாக்குதிருட்டு குறித்து மக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. வாக்கு இயந்திர நடைமுறையை தவிர்த்து வாக்குச்சீட்டு நடைமுறை கொண்டு வந்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்று நம்புகிறது.
இதற்கு முன்னோட்டமாக கர்நாடக மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்களை வாக்குச்சீட்டு கொண்டு நடத்துவது என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பதிலளிக்கையில், சட்டமன்றத்தில் இரு அவைகளிலும் சட்டத்தை நிறைவேற்றினால் உள்ளாட்சி தேர்தல்களை வாக்குச்சீட்டு முறைப்படி நடத்தலாம். இதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியமில்லை என்று விளக்கமளித்துள்ளார். பெங்களூரு மாநகராட்சி தற்போது கிரேட்டர் பெங்களூரு என்று பெயர் மாற்றி 5 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாக்குச்சீட்டு நடைமுறையை கொண்டுவந்தால் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்று மக்கள் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். வாக்குச்சீட்டு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜவினர், காங்கிரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று குற்றம்சாட்டி உள்ளது. இதற்கிடையில் வாக்கு இயந்திரம் செயல்பாட்டு மதிப்பீட்டை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களின் சந்தேகங்களை தீர்த்துவைத்து தேர்தல் அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வாக்குச்சீட்டு முறை உறுதி செய்யும் என்று காங்கிரஸ் நம்புகிறது.
