ஆப்கன் படை அதிரடி தாக்குதல் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி: எல்லையில் கடும் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நடந்த மோதலில் 58 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலால் இரு நாடுகள் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.கடந்த சில வாரங்களில் தெஹ்ரீக் இ தலிபான்(டிடிபி) நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
கடந்த வாரம் கைபர் பக்துன்க்வா மாவட்டத்தில் டிடிபி தாக்குதலில் 2 அதிகாரிகள் உட்பட 11 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு காபூலில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எல்லையில் நடந்த பலத்த துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் தலைமை செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித்,‘‘ பலுச்சிஸ்தானில் உள்ள அங்கூர் அட்டா, பஜாவூர், குர்ரம்,சித்ரல் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 58 வீரர்கள் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட நிலைகள் அழிக்கப்பட்டன. மேலும்,ஏராளமான ஆயுதங்கள்,ராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. தாக்குதலில் 9 ஆப்கன் வீரர்களும் கொல்லப்பட்டனர். கத்தார், சவுதியின் வேண்டுகோளையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது’’ என்றார்.
ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறினால், எங்கள் ஆயுதப் படைகள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராக உள்ளன, மேலும் வலுவான பதிலடியை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி,‘‘ எல்லையில் உள்ள நிலைகள் மீது ஆப்கான் படைகள் எந்த வித காரணமுமின்றி தாக்குதலை நடத்தியுள்ளன.
பொதுமக்கள் மீது ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாகும். பாகிஸ்தான் படைகள் உடனடியாக உரிய பதிலை அளித்துள்ளன. எந்தவித ஆத்திரமூட்டலையும் பொறுத்துக்கொள்ள முடியாது’’ என்றார்.
* ஆப்கன் அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை
இதற்கிடையே இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முட்டாகி, நேற்று டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்துவதற்கு, இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் நெருக்கமாகி வருவதுதான் காரணமா என்று கேட்ட போது,‘‘ இந்த கேள்வியை பாகிஸ்தானிடம் கேளுங்கள். எங்களுக்கு பாகிஸ்தானுடன் எந்த வித பிரச்னையும் இல்லை.
பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் எங்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. கத்தார், சவுதி ஆகிய நாடுகள் மோதலை நிறுத்தும்படி கேட்டு கொண்டன. அதை நாங்கள் ஏற்று கொண்டோம். பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்து உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தி உள்ளோம்.
இந்த பிராந்தியம் முழுவதும் அமைதியை கொண்டு வர முயற்சிக்கின்றோம்.யாருக்காவது அமைதி தேவை இல்லையென்றால், எல்லையை நாங்கள் பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்’’ என்றார். இதற்கிடையே கடந்த 10ம் தேதி டெல்லியில் முட்டாகி பேட்டியளித்தபோது பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையான நிலையில் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* 200 தலிபான்கள் பலி?
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானுடன் நடந்த எல்லை மோதலில் 23 பாகிஸ்தான் வீரர்கள், 200க்கும் மேலான தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடைய போராளிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.
* பாக். குற்றச்சாட்டு
ஆப்கானிஸ்தானின் மண்ணில் தீவிரவாத குழுக்கள் செயல்படுவதற்கு தலிபான்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை கருதி ஆப்கனில் செயல்பட்டு வரும் ஆயுத குழுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தீவிரவாத இலக்குகளை தொடர்ந்து செயலிழக்கச் செய்வதன் மூலம் தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையை பாகிஸ்தான் தொடர்ந்து பயன்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.