ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு; 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம்
காபூல் : கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே 27 கிமீ தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால், வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன.
கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 622 பேர் பலியான நிலையில், 1500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பலரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக கிழக்கு ஆப்கானிஸ்தானில் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி, சபடேர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. நிலநடுக்கத்தால் பல கிராமங்கள் முற்றாக உருக்குலைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மேலும் பலரை காணவில்லை என்பதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. அதனால், இன்னும் உயிரிழப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில், மீண்டும் 4.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த 2 நிலநடுக்கத்தால், நகங்கர் மாகாணத்தில் மக்கள் அச்சம் அடைந்தனர்.