வழக்கறிஞர் ராஜீவ் காந்தி விசிகவினர் ஆஜராக சம்மன்: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரம்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரத்தில்,வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, விசிகவினர் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கு விசாரணையின்போது, காலணி வீச முயற்சி நடந்தது. இதை கண்டித்து, கடந்த அக்.7ம் தேதி விசிகவின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். மதியம் 2:30 மணியளவில் உயர்நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் வழி விடாமல் சென்றதால், கார் டிரைவர் ஹாரன் அடித்தபடி சென்றார். இதனால் ஸ்கூட்டரில் சென்றவர் நடுரோட்டில் சாலையை மறித்து ஸ்கூட்டரை நிறுத்தியதோடு, ஏன் ஹாரன் அடிக்கிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் அதிமுக.வை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (36), என்பது தெரிய வந்தது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, விசிக வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .
வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது விசிக தலைவர் தரப்பிலிருந்து வழக்கறிஞர் பார்வந்தன் அளித்த புகாரின் பேரில், தவறாக தடுத்து நிறுத்தல், கொலை மிரட்டல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவமதிப்பு ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத 20 விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மீது காயம் ஏற்படுத்துதல் ,ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினருக்கும் எக்ஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி இன்று காலை 11 மணிக்கு சென்னை எக்ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டது. விசிக கட்சியைச் சார்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருதரப்பு வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்ய இருப்பதாகவும், அத்துடன், ராஜீவ் காந்தி அங்கு எதற்காகச் சென்றார் என்ற விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி காலையிலும், விசிகவினர் மாலையிலும் வருமாறு போலீசார் அழைத்திருக்கிறார்கள்.