அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபூபக்கர் சித்திக்கை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
சென்னை: அத்வானி ரத யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் அபூபக்கர் சித்திக்கிற்கு 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நாகூர் அபூபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அபூபக்கர் சித்திக்கை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மலர்விழி, அபூபக்கர் சித்திக்கை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், என்று உத்தரவிட்டார். இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அபூபக்கர் சித்திக்கை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்ய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.