எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!!
சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன், எம்எல்ஏ இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் மீது எடுத்த நடவடிக்கை மூலம் பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரான செங்கோட்டையனின் நீக்கத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். பிரிந்து சென்றவர்களை எடப்பாடி ஒருங்கிணைக்காவிட்டால் நாங்கள் ஒருங்கிணைப்போம் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒரே அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த சந்திப்பை தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. செங்கோட்டையனைத் தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சிப் பொறுப்புகளையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. கே.ஏ. சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், வேலு, ரமேஷ் மற்றும் மோகன்குமார் ஆகியோரின் பதவிகளைப் பறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.