தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பரபரப்பு; ‘யார் வேண்டுமானாலும் தந்தையாகலாம் எல்லோராலும் ‘அப்பா’ ஆகிவிட முடியாது’: கண்ணீர் மல்க நடிகை பர்ஹானா பேட்டி
மும்பை: இந்தி தொலைக்காட்சி கழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை பர்ஹானா பட், தனது தந்தை குறித்து சக போட்டியாளரிடம் உருக்கமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை பர்ஹானா பட், தனது தந்தை குறித்து கூறிய கருத்துகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. டிவி நிகழ்ச்சியின் சக போட்டியாளரான அபிஷேக் பஜாஜிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பர்ஹானா பட் தனது தந்தை குறித்து கண்ணீருடன் பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனது தந்தை ஒரு பொறுப்பற்றவர் என்றும், அவரை புகைப்படங்களில் மட்டுமே பார்த்துள்ளதாகவும், ஒருமுறை கூட நேரில் சந்தித்ததில்லை என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
தனது தாயார், தந்தை மீது நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தியதாகவும், அந்த அனுபவமே தனக்கு திருமணம் மீது ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் தந்தை ஆகிவிடலாம்; ஆனால் எல்லோராலும் ‘அப்பா’ ஆகிவிட முடியாது. அவர் எங்களை பிரிந்து சென்றது தவறு அல்ல; அது அவரின் வாழ்க்கை முறை தேர்வு. என் தந்தையின் மற்ற உறவுகள் மூலமாக பிறந்த எனது சகோதரிகளும் கூட அவரின் நடவடிக்கைகளைப் பற்றி குறை கூறுகின்றனர்’ என்று குறிப்பிட்டார். மேலும், தனது தாயின் நலனே தனக்கு முக்கியம் என்றும், அதனால்தான் என் தாய் கூட இந்த டிவி நிகழ்ச்சியில் பார்வையாளராக கூட வர விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சினிமா துறையில் தனது கனவுகளை நனவாக்க, காணொலிகளை வெளியிட்டபோது தனது தாயாரின் உறவினர்களிடமிருந்து பல மிரட்டல்கள் வந்ததாகவும், ஒருவேளை தனது தந்தை தன் வாழ்வில் இருந்திருந்தால், தன்னால் சினிமாவில் நுழைந்திருக்கவே முடிந்திருக்காது என்றும் பர்ஹானா பட் உருக்கமாகத் தெரிவித்தார்.