நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்: மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபருக்கு வலை
சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், மந்தைவெளியில் வசித்து வரும் நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் வெடி குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனே பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி பட்டினப்பாக்கம் போலீசார் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் உதவியுடன் தேடி வருகின்றனர்.